திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.36 திருக்காளத்தி பண் - கொல்லி |
சந்தமார் அகிலொடு சாதிதேக் கம்மரம்
உந்துமா முகலியின் கரையினில் உமையொடும்
மந்தமார் பொழில்வளர் மல்குவண் காளத்தி
எந்தையார் இணையடி யென்மனத் துள்ளவே.
|
1 |
ஆலமா மரவமோ டமைந்தசீர்ச் சந்தனஞ்
சாலமா பீலியுஞ் சண்பக முந்தியே
காலமார் முகலிவந் தணைதரு காளத்தி
நீலமார் கண்டனை நினையுமா நினைவதே.
|
2 |
கோங்கமே குரவமே கொன்றையம் பாதிரி
மூங்கில்வந் தணைதரு முகலியின் கரையினில்
ஆங்கமர் காளத்தி யடிகளை அடிதொழ
வீங்குவெந் துயர்கெடும் வீடெளி தாகுமே.
|
3 |
கரும்புதேன் கட்டியுங் கதலியின் கனிகளும்
அரும்புநீர் முகலியின் கரையினி லணிமதி
ஒருங்குவார் சடையினை காளத்தி யொருவனை
விரும்புவா ரவர்கள்தாம் விண்ணுல காள்வரே.
|
4 |
வரைதரும் அகிலொடு மாமுத்தம் உந்தியே
திரைதரு முகலியின் கரையினில் தேமலர்
விரைதரு சடைமுடிக் காளத்தி விண்ணவன்
நிரைதரு கழலிணை நித்தலும் நினைமினே.
|
5 |
இப்பதிகத்தில் ஆறாம் செய்யுள் மறைந்து போயிற்று.
|
6 |
இப்பதிகத்தில் ஏழாம் செய்யுள் மறைந்து போயிற்று.
|
7 |
முத்துமா மணிகளும் முழுமலர்த் திரள்களும்
எத்துமா முகலியின் கரையினில் எழில்பெறக்
கத்திட அரக்கனைக் கால்விரல் ஊன்றிய
அத்தன்றன் காளத்தி அணைவது கருமமே.
|
8 |
மண்ணுமா வேங்கையும் மருதுகள் பீழ்ந்துந்தி
நண்ணுமா முகலியின் கரையினில் நன்மைசேர்
வண்ணமா மலரவன் மாலவன் காண்கிலா
அண்ணலார் காளத்தி ஆங்கணைந் துய்ம்மினே.
|
9 |
வீங்கிய உடலினர் விரிதரு துவருடைப்
பாங்கிலார் சொலைவிடும் பரனடி பணியுமின்
ஓங்குவண் காளத்தி யுள்ளமோ டுணர்தர
வாங்கிடும் வினைகளை வானவர்க் கொருவனே.
|
10 |
அட்டமா சித்திகள் அணைதரு காளத்தி
வட்டவார் சடையனை வயலணி காழியான்
சிட்டநான் மறைவல ஞானசம் பந்தன்சொல்
இட்டமாப் பாடுவார்க் கில்லையாம் பாவமே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.69 திருக்காளத்தி - திருவிராகம் பண் - சாதாரி |
வானவர்கள் தானவர்கள் வாதைபட
வந்ததொரு மாகடல்விடந்
தானமுது செய்தருள் புரிந்தசிவன்
மேவுமலை தன்னைவினவில்
ஏனமின மானினொடு கிள்ளைதினை
கொள்ளஎழி லார்க்கவணினாற்
கானவர்தம் மாமகளிர் கனகமணி
விலகுகா ளத்திமலையே.
|
1 |
முதசினவில் அவுணர்புரம் மூன்றுமொரு
நொடிவரையின் மூளவெரிசெய்
சதுரர்மதி பொதிசடையர் சங்கரர்
விரும்புமலை தன்னைவினவில்
எதிரெதிர வெதிர்பிணைய எழுபொறிகள்
சிதறஎழி லேனமுழுத
கதிர்மணியின் வளரொளிகள் இருளகல
நிலவுகா ளத்திமலையே.
|
2 |
வல்லைவரு காளியைவ குத்துவலி
யாகிமிகு தாருகனைநீ
கொல்லென விடுத்தருள் புரிந்தசிவன்
மேவுமலை கூறிவினவில்
பல்பல இருங்கனி (*)பருங்கிமிக
வுண்டவை நெருங்கியினமாய்க்
கல்லதிர நின்றுகரு மந்திவிளை
யாடுகா ளத்திமலையே.
(*) பருகி எனச்சொல்வது விகாரவகையாற் பருங்கியென நின்றது.
|
3 |
வேயனைய தோளுமையோர் பாகமது
வாகவிடை யேறிசடைமேற்
தூயமதி சூடிசுட காடில்நட
மாடிமலை தன்னைவினவில்
வாய்கலச மாகவழி பாடுசெயும்
வேடன்மல ராகுநயனங்
காய்கணையி னாலிடந் தீசனடி
கூடுகா ளத்திமலையே.
|
4 |
மலையின்மிசை தனில்முகில்போல் வருவதொரு
மதகரியை மழைபோலலறக்
கொலைசெய்துமை யஞ்சவுரி போர்த்தசிவன்
மேவுமலை கூறிவினவில்
அலைகொள்புனல் அருவிபல சுனைகள்வழி
யிழியவயல் நிலவுமுதுவேய்
கலகலென வொளிகொள்கதிர் முத்தமவை
சிந்துகா ளத்திமலையே.
|
5 |
பாரகம் விளங்கிய பகீரதன்
அருந்தவம் முயன்றபணிகண்
டாரருள் புரிந்தலைகொள் கங்கைசடை
யேற்றஅரன் மலையைவினவில்
வாரதர் இருங்குறவர் சேவலின்
மடுத்தவர் எரித்தவிறகிற்
காரகில் இரும்புகை விசும்புகமழ்
கின்றகா ளத்திமலையே.
|
6 |
ஆரமெதி ராதவலி யாகியச
லந்தரனை யாழியதனால்
ஈரும்வகை செய்தருள் புரிந்தவன்
இருந்தமலை தன்னைவினவில்
ஊரம்அர வம்மொளிகொள் மாமணியு
மிழ்ந்தவையு லாவிவரலாற்
காரிருள் கடிந்துகன கம்மெனவி
ளங்குகா ளத்திமலையே.
|
7 |
எரியனைய சுரிமயிர் இராவணனை
யீடழிய எழில்கொள்விரலாற்
பெரியவரை யூன்றியருள் செய்தசிவன்
மேவுமலை பெற்றிவினவில்
வரியசிலை வேடுவர்கள் ஆடவர்கள்
நீடுவரை யூடுவரலாற்
கரியினொடு வரியுழுவை அரியினமும்
வெருவுகா ளத்திமலையே.
|
8 |
எரியனைய சுரிமயிர் இராவணனை
யீடழிய எழில்கொள்விரலாற்
பெரியவரை யூன்றியருள் செய்தசிவன்
மேவுமலை பெற்றிவினவில்
வரியசிலை வேடுவர்கள் ஆடவர்கள்
நீடுவரை யூடுவரலாற்
கரியினொடு வரியுழுவை அரியினமும்
வெருவுகா ளத்திமலையே.
|
9 |
இனதளவி லிவனதடி யிணையுமுடி
யறிதுமென இகலுமிருவர்
தனதுருவம் அறிவரிய சகலசிவன்
மேவுமலை தன்னைவினவிற்
புனவர்புன மயிலனைய மாதரொடு
மைந்தரும ணம்புணரும்நாள்
கனகமென மலர்களணி வேங்கைகள்
நிலாவுகா ளத்திமலையே.
|
10 |
நின்றுகவ ளம்பலகொள் கையரொடு
மெய்யிலிடு போர்வையவரும்
நன்றியறி யாதவகை நின்றசிவன்
மேவுமலை நாடிவினவிற்
குன்றில்மலி துன்றுபொழில் நின்றகுளிர்
சந்தின்முறி தின்றுகலவிக்
கன்றினொடு சென்றுபிடி நின்றுவிளை
யாடுகா ளத்திமலையே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |